தும்பர ரட்டா கலால (பாய்) பாரம்பரிய கைவினைத்திறன்
இலங்கையில் தும்பர ரட்டா கலால (தும்பர பாய்கள்) தயாரிக்கும் பாரம்பரிய கைவினைத்திறன் 2021 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் புலனாகாத கலாசார மரபுரிமை பற்றிய யுனெஸ்கோவின் பிரதிநிதி பட்டியலில் பொறிக்கப்பட்டது. கலாசிறிகம மற்றும் அலோககம கிராமங்களில் கின்னார சமூகத்தினரால் முக்கியமாக உற்பத்தி செய்யப்படும் இந்த கையால் நெய்யப்பட்ட பாய்கள், சுவர் தொங்கல்கள், ஓவியத்திரைகள் மற்றும் மெத்தை உறைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வரலாற்று ரீதியாக, அவை அரச அரண்மனைகள் மற்றும் ஆளும் உயர்குடியினருக்காக வடிவமைக்கப்பட்டன. இந்தப் பாய்கள் ஹனா தாவர இழைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, அவை சுத்தம் செய்யப்பட்டு, உலர்த்தப்பட்டு, வாரப்பட்டு, தும்பர பள்ளத்தாக்கிலிருந்து பெறப்படும் இயற்கை மூலிகை சாயங்களைப் பயன்படுத்தி சாயமிடப்படுகின்றன. நெசவு ஒரு தறியில் செய்யப்படுகிறது, மரத்தாலான பட்டிகையைப் பயன்படுத்தி முனைப்புக் கூறுகள் கவனமாக செருகப்படுகின்றன. குறியீட்டு வடிவமைப்புகளில் சிறந்து விளங்கும் தும்பர பாய்கள் இலங்கையின் கலாசார அடையாளத்தைக் பிரதிபலிக்கின்றன என்பதுடன், இந்த கைவினைப் பற்றிய அறிவு தலைமுறை தலைமுறையாக அவதானிப்பு மற்றும் பயிற்சி மூலம் கடத்தப்படுகின்றது.